தமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தவிர மற்ற இடங்களில் மதுபானக் கடைகளை மே-7-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு தற்பொழுது அனுமதியளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவைத் தடுக்கப் பிறப்பிக்கப்பட்டிருந்த 40 நாள்கள் ஊரடங்கு உத்தரவு இன்று முதல் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தவிர பிற இடங்களில் பெரும்பாலும் சிறிய கடைகள் திறந்தன. இந்தநிலையில், மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானக் கடைகள், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி அளித்துள்ளது. எனினும் மதுபானக் கூடங்கள் திறப்பதற்கு அனுமதிவழங்கப்படவில்லை.
இந்தநிலையில், தமிழ்நாட்டையொட்டியுள்ள ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலுள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால், மாநிலங்களுக்கு இடையையேனா மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இவற்றைக் கருத்திக்கொண்டு தமிழ்நாட்டிலும் மே 7-ம் தேதி முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படுகிறது. ஆனால் மதுபானக் கடைகளில் தற்பொழுது கூட்டம் கூடுவது தவிர்க்கப்படவேண்டும். ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி ஆறு அடி தூரமாக பராமரிக்கப்பட வேண்டும்.
மதுபானக்கடைகளில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகிறது. ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும் தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.